நம்பிள்ளை

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

சென்ற பதிவில் நஞ்சீயரை (https://guruparamparaitamil.wordpress.com/2015/08/01/nanjiyar/) பற்றி  அனுபவித்தோம். இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான நம்பிள்ளை விஷயமாக அனுபவிப்போம்.

(நம்பிள்ளை – திருவல்லிக்கேணி)

திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை

அவதார ஸ்தலம்: நம்பூர்

ஆசார்யன்: நஞ்சீயர்

ஶிஷ்யர்கள்: வடக்குத் திருவீதிப் பிள்ளை , பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் , ஈயுண்ணி மாதவப் பெருமாள், நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்  மற்றும் பலர்

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

அருளிச்செய்தவை: திருவாய்மொழி 36000 படி ஈடு வியாக்யானம் , கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்யானம், திருவந்தாதி வ்யாக்யானங்கள், திருவிருத்தம் வியாக்யானம் .

நம்பூர் என்ற கிராமத்தில் வரதராஜன் என்ற திருநாமத்தோடே திருவவதாரம் செய்த இவரே பிற்காலத்தில் நம்பிள்ளை என்று பிரஸித்தர் ஆனார் . இவர் திருக்கலிக்கன்றி தாஶர், கலிவைரி தாஶர் , லோகாசார்யர், சூக்தி மஹார்ணவர், ஜகதாசார்யர் மற்றும் உலகாசிரியர் என்ற திருநாமங்களாலும் போற்றி வணங்கப்படுகிறார்.

பெரிய திருமொழி 7.10.10 பதிகத்தில் கண்டது போல, திருமங்கை ஆழ்வார் பாசுரங்களுடைய அர்த்தங்களை திருக்கண்ணமங்கை எம்பெருமான் கலியனிடமிருந்தே கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் கலியனே நம்பிள்ளையாக அவதரித்து, எம்பெருமான் பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்து அருளிச்செயலினுடைய அனைத்து விஶேஷார்த்தங்களையும் கற்றுக்கொண்டார். நஞ்சீயர் 9000 படி வ்யாக்யானத்தை அழகாக ஏடுபடுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியில் இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது, நம்பூர் வரதராஜர் தான் இதைச் செய்வதற்கு ஏற்றவர் என்று அவர்கள் கூறினார்கள். நஞ்சீயரின் திருவுள்ளத்  திருப்திக்கேற்ப இந்த வ்யாக்யானத்தை எழுதுவதாக வரதராஜர் நஞ்சீயரிடம்  கூறினார். நஞ்சீயர் 9000 படி வ்யாக்யானத்தை முழுமையாக விளக்கி, பின்பு வரதராஜருக்கு மூல ப்ரதியைக் கொடுத்தார். வரதராஜர் தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்று எழுதினால் தான் அதில் கவனம் செலுத்த முடியும் என்பதால், காவிரியைக் கடந்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்தார். காவிரியைக் கடந்து செல்லும் பொழுது திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்தது. அதனால் வரதராஜர் காவிரியை நீந்திக்கடந்து சென்றார். அந்த சமயத்தில் அவர் கையில் இருந்த மூல ப்ரதி நழுவி விழுந்து, அதை வெள்ளம் அடித்துச் சென்றது. மிகவும் வருத்தமுற்ற வரதராஜர், தன்னுடைய ஊருக்கு வந்தவுடன், ஆசார்யனையும் அவர் கூறிய அர்த்த விஶேஷங்களையும் த்யானித்துக் கொண்டு 9000 படி வ்யாக்யானத்தை மறுபடியும் எழுதத்தொடங்கினார். வரதராஜர் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் வல்லுனராக இருந்தமையால், பொருந்தக்கூடிய இடத்தில் சில நல்ல அர்த்தங்களைச் சேர்த்து எழுதி, நஞ்சீயரிடம் சென்று ஸமர்ப்பித்தார். நஞ்சீயர் அந்த வ்யாக்யானத்தைப் படித்துவிட்டு, மூல ப்ரதியை விட சற்று மாறுதல்கள் இருப்பதைக் கண்டு, ஏன் இந்த மாற்றம்? என்ன நடந்தது என்று கேட்டார். வரதராஜர் நடந்த விஷயத்தைக் கூறினார், அதைக் கேட்டவுடன் மிகவும் மகிழ்ந்தார். வரதராஜருடைய உண்மையான பெருமையை உணர்ந்து, நஞ்சீயர் அவருக்கு “நம்பிள்ளை” மற்றும் “திருக்கலிகன்றி தாஸர்” என்ற திருநாமத்தைச் சூட்டினார். பட்டர்-நஞ்சீயர் ஆசார்ய ஶிஷ்ய பாவம் மற்றும் அவர்களுடைய ஸம்பாஷணைகளைப் போல, நஞ்சீயர்-நம்பிள்ளை விஷயத்திலும் மிகவும் சுவரஸ்யமானதாகவும் மற்றும் மிகச் சிறந்த அர்த்தங்களை உடையதாகவும் இருக்கும். அவற்றில் சிலவற்றை இப்பொழுது அனுப்பவிப்போம்.

  • உபாயாந்தரத்திற்குப் (கர்ம, ஞான, பக்தி) பல ப்ரமாணங்கள் இருப்பதைப் போல, சரணாகதிக்கு ஏன் பல ப்ரமாணங்கள் இல்லை என்று நம்பிள்ளை நஞ்சீயரிடம் கேட்டார். அதற்கு நஞ்சீயர் “ப்ரத்யக்ஷமாக புரிந்து உணர்ந்து கொள்ளும் விஷயத்திற்கு, ப்ரமாணம் தேவையில்லை. அதாவது ஒருவன் நதியில் மூழ்கும் பொழுது, நதியில் மூழ்காத மற்றொருவனை சரணடைவது போல – நாம் அனைவரும் இந்த ஸம்ஸாரமாகிர பெருங்கடலிலே மூழ்கியிருக்கிறோம் ஆனால் எம்பெருமானோ இந்த ஸம்ஸாரத்தினுடைய அழுக்கு ஒட்டாதவனாய் இருக்கிறான், அதனால் அவனே உபாயம் என்று பற்றுவதே மிகவும் பொருத்தமானதாகும். அது மட்டுமல்லாமல் சரணாகதியைப் பற்றி சில ப்ரமாணங்களை ஶாஸ்திரத்திலிருந்து கூறி அதை நிரூபித்தார். அதோடு என்றும் ப்ரமாணத்தினுடைய எண்ணிக்கைகளை வைத்துக் கொண்டு ஒரு விஷயம் உயர்ந்தது என்று கூறமுடியாது, உதாரணத்திற்கு இந்த உலகத்தில் பல ஸம்ஸாரிகள் உள்ளனர் ஆனால் ஸன்யாஸிகளோ மிகக் குறைந்த அளவில் தான் உள்ளார்கள், அதற்காக ஸம்ஸாரிகள் சிறந்தவர்கள் என்று கூற முடியுமா?” என்று விவரித்தார். இதைக் கேட்டவுடன் நம்பிள்ளை மிகவும் திருப்தி அடைந்தார்.
  • “ஒருவன் தனக்கு ஸ்ரீவைஷ்ணவத்வம் உள்ளது என்று எப்பொழுது உணர்வான்?” என்று நம்பிள்ளை நஞ்சீயரிடம் கேட்டார். அதற்கு நஞ்சீயர் “எவன் ஒருவன் அர்ச்சாவதாரத்தில் பரத்வத்தைப் பார்க்கிறானோ, அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களிடமும் வேற்றுமை இல்லாமல் உண்மையான பற்றை வைத்துள்ளானோ அதாவது தன் மனைவி மற்றும் குழந்தைகளிடம் கொண்டிருக்கும் அதே பற்றை மற்றைய ஸ்ரீவைஷ்ணவர்களிடம் வைத்துள்ளானோ மற்றும் எவன் ஒருவன் யாரேனும் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தன்னை நிந்தித்தாலும், அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கோண்டு அவருக்கும் ஸ்ரீவைஷ்ணவ்த்வம் உள்ளது என்று நினைக்கிறானோ” அப்பொழுது உணர்வான் என்று கூறினார்.
  • நம்பிள்ளை நஞ்சீயரிடம் ஸ்ரீ பாஷ்யம் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் , நஞ்சீயர் தமது  பெருமாளுக்கு திருவாராதனம் செய்யுமாறு நம்பிள்ளையைப் பணித்தார். தமக்கு திருவாராதனம் செய்ய முழுமையாக தெரியாது என்று ஸாதித்த நம்பிள்ளையிடம் , நஞ்சீயர் த்வய மஹா மந்திரத்தை (அதாவது அர்ச்சாவிக்ரஹ ரூபமாய் அனைத்து இடங்களிலும் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் எளிமையைக் கொண்டாடும் வண்ணம் த்வய மஹாமந்திரத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் நடுவில் “ஸர்வ மங்கள விக்ரஹாய” என்று சேர்த்து) அனுசந்தித்து எம்பெருமானுக்கு போகத்தை கண்டருளப்பண்ணும் படி நியமித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில், நம் பூருவர்கள் அனைத்துக்கும் த்வய மஹா மந்திரத்தையே ஶரணாகக் கொண்டிருந்தனர் .
  • நம்பிள்ளை நஞ்சீயரிடம் , “எம்பெருமானின் திருவவதாரங்களின் நோக்கம் யாது?” என்று கேட்க, அதற்கு நஞ்சீயர் , “பாகவதர்கள் பக்கலிலே அபசாரப்பட்டவர்கள் அதற்கான தகுந்த தண்டனைகளைப் பெறுவதற்காகவே எம்பெருமான் பெரிய காரியங்களை மேற்கொள்வதாக ஸாதித்தார். (உதாரணமாக கண்ணனாக எம்பெருமான் , தன் அடியாரிடம் அபசாரப்பட்ட துரியோதனன் கொல்லப்படவேண்டும் என்பதற்காக, தான் பல துன்பங்களை ஏற்றான் )
  • பின், நம்பிள்ளை நஞ்சீயரிடம் “பாகவத அபசாரம் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நஞ்சீயர் “மற்ற ஸ்ரீ வைஷ்ணவர்களையும் நம்மைப் போன்றவர்கள்” என்று எண்ணுதல் பாகவத அபசாரம் என்று ஸாதித்து, பாகவதர்களின் பெருமைகளை எடுத்துக்காட்டும் ஆழ்வார்களின் பாசுரங்களைச் ஸாதித்து , அவற்றை ஆதாரமாகக் கொண்டு நாம் அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி  பாகவதர்களை நம்மில் பன்மடங்கு மேலானவர்கள் என்று கொள்ளுதல் வேண்டும் என்றும் ஸாதித்தார். மேலும் ஆழ்வார்கள் மற்றும் பூருவாசாரியர்கள் நடந்து காட்டிய வண்ணம் நாமும் பலவைகைகளில் திருமால் அடியார்களைக் கொண்டாடுதலில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஸாதித்தார் .
  • மேலும், நம்பிள்ளையிடத்தே நஞ்சீயர் ,”பகவத் விஷய அனுபவத்திலே ஈடுபடும் ஒருவருக்கு லோக விஷய அனுபவங்களான ஐஶ்வர்யம், அர்த்தம், காமம் போன்றவைகளின் மீது ஈடுபாடு அறுபடுதல் வேண்டும் என்று ஸாதித்தார் . இதை ஆழ்வார்களின் பாசுரங்களைக் கொண்டு விளக்கினார். மேலும் எம்பெருமானின் பெருமைகளை உணர்ந்த மாத்திரத்திலேயே “வாடினேன் வாடி வருந்தினேன்  ..நாராயணா என்னும் நாமம்” என்று எவ்வாறு திருமங்கை ஆழ்வார் உலக விஷயப்பற்றுகளைத் துறந்தார் என்பதையும் மேற்கோளாகக் காட்டினார். இதைக் கேட்ட நம்பிள்ளை தானும் பரவசித்து மிகவும் தெளிந்து நஞ்சீயரோடே எழுந்தருளியிருந்து அவருக்கு அனைத்து கைங்கர்யங்களையும் செய்து கொண்டும் காலக்ஷேபங்கள் கேட்டுக்கொண்டும் இருந்தார்.
  • நஞ்சீயர் திருவாய்மொழி காலக்ஷேபத்தை நூறு முறை செய்தருளினார் . இதனை அடுத்து நம்பிள்ளை நஞ்சீயருக்கு ஶதாபிஷேக மஹோத்ஸவம் செய்தருளினார். இக்காலக்ஷேபங்கள் வாயிலாக நம்பிள்ளை நஞ்சீயரிடமிருந்து பூர்வாசாரியர்கள் சாதித்த அனைத்து அர்த்தங்களையும் பெற்றார்.

நம்பிள்ளை தனித்துவம் பொருந்திய பல ஆத்ம குணங்களோடு கூடியவராய் அளவிலடங்கா பெருமைகளுக்குறைவிடமாய் எழுந்தருளி இருந்தார். தமிழ் மற்றும் வடமொழிகளில் மிகவும் தேர்ந்தவராய் நம்பிள்ளை விளங்கினார். இவர் தனது விரிவுரைகளில் திருக்குறள், நன்னூல், கம்ப இராமாயணம் போன்றவைகளிலிருந்தும் வேதாந்தம், விஷ்ணுபுராணம் , ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் போன்றவைகளிலிருந்தும் மிக எளிதாக மேற்கோள் காட்டியருளினார். எப்பொழுதாவது எவருக்கேனும் ஆழ்வார்களின் வைபவங்களிலோ அருளிச்செயல்களிலோ ஸந்தேகங்கள் வருகையில், அனைத்து வைதீகர்களாலும் ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் ஏற்கப்பட்டிருந்தமையால் , அதைக்கொண்டு அந்த ஸந்தேகங்களை தீர்த்து வைப்பதில் நம்பிள்ளை தேர்ந்தவராய் இருந்தார். அவரின் பெருமைகளையும் பணிவையும் பறைசாற்றக்கூடிய சில வைபவங்களை நாம் இப்பொழுது காணலாம் .

  • நம்பிள்ளை , பெரிய பெருமாள் பாதம் நீட்டிக்கொண்டிருக்கும் கிழக்கு திசை திருச்சுற்றிலே  எழுந்தருளியிருந்து காலக்ஷேபம் சாதித்து வந்தார். அதனால் தான் இன்றளவும் நாம் ஸந்நிதியைவிட்டு வெளியே வந்தவுடன் இவ்விடதிற்கு நமது ப்ரணாமங்களைச் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம் . நம்பிள்ளையின் காலக்ஷேபத்தில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைமிகுதியால் பெரிய பெருமாள் தமது அர்ச்சை நிலையைக் கலைத்து எழுந்து நின்றார். ஸந்நிதியின் திருவிளக்குகளைக் கண்காணிக்கும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவரான திருவிளக்குப்பிச்சன் என்பவர் இதனைக்கண்டு அர்ச்சை நிலையை தாம் கலைத்தல் ஆகாது என்று கூறி பெரியபெருமாளைத் திருவனந்தாழ்வான் மீது கிடக்குமாறு தள்ளிவிட்டார் .
  • நம்பிள்ளை கோஷ்டியோ அல்லது நம்பெருமாள் கோஷ்டியோ என்று கண்டவர் வியக்கும் வண்ணம் நம்பிள்ளையின் காலக்ஷேபங்கள் அமைந்தன. எவ்வாறு அரங்கனகரப்பன் தனது நடை அழகால் அடியார்களை ஈர்த்தானோ அவ்வாறே நம்பிள்ளை தனது உரையால் அடியார்களை ஈர்த்தார் .
  • நம்பிள்ளையின் பணிவு தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஒருமுறை முதலியாண்டான் திருவம்ஶத்தில் வந்துதித்தவரான கந்தாடை தோழப்பர் என்பவர், நம்பிள்ளையின் பெருமைகளை உணராதிருந்தமையால் அது கடும் சொற்களாக நம்பெருமாள் திருமுன்பே வெளி வந்தது. இதனைக் கண்டு , நம்பிள்ளை மறுவார்த்தை ஒன்றும் ஸாதிக்காமல் தனது திருமாளிகைக்கு எழுந்தருளி விட்டார். பிறகு தனது திருமாளிகைக்குத் திரும்பிய கந்தாடை தோழப்பருக்கு, நடந்தவற்றை பிறர் வாயிலாகக் கேட்டறிந்த அவரது தேவிகள், நம்பிள்ளையின் பெருமைகளை கூறி உணர்த்தி மேலும் நம்பிள்ளை திருவடிகளில் விழுந்து மன்னிப்பு வேண்டுவது பற்றியும் அறிவுறுத்தினார். தம் பக்கல் இருந்த குற்றத்தை உணர்ந்த கந்தாடை தோழப்பர் தானும் நம்பிள்ளையிடம் மன்னிப்பு வேண்ட புறப்பட்டார். அதற்காக தனது திருமாளிகையின் வாயிற்கதவுகளைத் திறந்த பொழுது அங்கே யாரோ ஒருவர் காத்துக்கொண்டிருப்பதை கவனித்தவர், அது நம்பிள்ளை என்றும் உணர்ந்தார். தோழப்பரைக் கண்ட நம்பிள்ளை தானும் தெண்டனிட்டு, தோழப்பர் திருவுள்ளம் கன்றும் வண்ணம் தாம் அபசாரம் செய்து விட்டதாகக் கூறினார். தம்மீது குற்றம் இருந்த போதிலும் அதை நம்பிள்ளை பெருந்தன்மையோடு  தானெடுத்துக்கொண்டு மன்னிப்பு கோரியதைக் கண்ட தோழப்பர்  நம்பிள்ளையின் பெருமையைக்கண்டு திடுக்கிட்டார். உடனே தோழப்பர் தானும் நம்பிள்ளைக்கு தெண்டன் ஸமர்பித்து நம்பிள்ளைக்கு “உலகாரியன்” என்னும் திருநாமத்தை சாற்றினார். இத்தனை பெருமைகளால் நிரம்பப்பெற்றும் பணிவோடு இருக்ககூடிய ஒருத்தரே உலகாரியன் என்று போற்றப்படவேண்டியவர் என்றும் அந்து பணிவு நம்பிள்ளையிடத்தே இருப்பதால், அவரே உலகாரியன் என்று போற்றப்பட வேண்டியவர் என்று தோழப்பர் ஸாதித்தார். பின் நம்பிள்ளை மீது தனக்கு இருந்த வெறுப்பைத் துறந்து, தோழப்பர் தனது தேவிகளோடு நம்பிள்ளையிடம் கைங்கர்யத்தில் ஈடுபட்டார். நம்பிள்ளை இடத்தே அனைத்து ஶாஸ்த்ரார்த்தங்களையும் கற்றார். இந்த வைபவத்தை விஶதவாக் ஶிகாமணியான  மணவாளமாமுநிகள் தனது உபதேஶரத்தினமாலையில் துன்னுபுகழ் கந்தாடை தோழப்பரையும் நம்பிள்ளையையும் கொண்டாடி அனுபவிக்கிறார். இது நம்பிள்ளையின் தூய்மையை நமக்கு எடுத்து காட்டுகிறது . மேலும் நம்பிள்ளையோடே ஏற்பட்ட ஸம்பந்தத்தினால் கந்தாடை தோழப்பருக்கும் இந்த தூய்மை ஏற்பட்டது என்று நாம் புரிந்துக்கொள்ளலாம் .
  • ஸ்ரீ பராஶர பட்டரின் திருவம்ஶத்தில் வந்தவரான நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் என்பவருக்கு நம்பிள்ளையின் பெருமைகளைக்கண்டு பொறாமை ஏற்பட்டது. ஒரு முறை அவர் அரசவைக்கு செல்லும் போது நம்பிள்ளை ஶிஷ்யரான பின்பழகிய பெருமாள் சீயரையும் தன்னுடன் அழைத்து சென்றார். அரசன் இவ்விருவரையும் வரவேற்று ஸம்பாவனை ஸமர்பித்து, அவர்களுக்கு அமர்வதற்கு  நல்ல ஆஸனங்களையும் அளித்தான். அரசன் பட்டரிடத்தே ஸ்ரீமத் ராமயணத்திருந்து சில ஸந்தேகங்களை கேட்டான். அது யாதெனில் , பெருமாள் ஸ்ரீ ராமாவதாரத்தில் தனது பரத்துவத்தை வெளிக்காட்ட போவதில்லை என்று உரைத்திருக்க எவ்வாறு ஜடாயுவை பார்த்து “கச்ச லோகான் உத்தமான் ” (உயர்ந்த லோகமான பரமபதத்திற்கு செல்வீர் )  என்று ஸாதித்தார் என்பதேயாம். இந்த ஸந்தேகத்திற்கான தக்க ஸமாதானம் தோன்றாது எங்கே தமது பெருமைக்குக் களங்கம் நேர்ந்துவிடுமோ என்ற கவலையோடு பட்டர் எழுந்தருளியிருக்கும் தருவாயில் அரசன் வேறு சில அரசுப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவனாய் இருந்தான் . அப்பொழுது பட்டர் ஜீயரைக்கண்டு , “இதை நம்பிள்ளை எவ்வாறு ஸாதிப்பார்? என்று கேட்க, சீயர் உடனே “ஸத்யேன லோகன் ஜயதி ராகவ : ”  என்ற ஶ்லோகத்தை ஸாதித்தார் . (அதாவது தனது உண்மையை மட்டுமே கூறும் தன்மையினால் உலகங்களை வென்றவன் ரகுகுலத்தோன்றல் ஸ்ரீ ராமன்). இந்த ஶ்லோகத்தை தியானித்த பட்டருக்கு சடக்கென்று தக்க ஸமாதனம் விளங்க, அரசனிடம் கூறினார். ஸமாதானம் கேட்டு அகமகிழ்ந்த அரசன் தானும் பட்டரைக்  கொண்டாடி அவருக்கு தக்க பரிசுப்பொருட்களை ஸமர்பித்தான். நம்பிள்ளையின் ஒரு ஸமாதானம் கேட்டே அவர் பெருமையை உணர்ந்த பட்டர் தானும். தான் பெற்ற பரிசுகளை நம்பிள்ளையிடத்தே ஸமர்ப்பித்து மேலும் தானும் நம்பிள்ளையைச் சரணடைந்து , நம்பிள்ளைக்கு அடிமை செய்வதையே அன்றுதொட்டு செய்துக்கொண்டிருந்தார் .

நம்பிள்ளை தான் எழுந்தருளியிருந்த காலத்தில் தன் ஶிஷ்யர்களுக்கு நல்ல உபதேஶங்களையும் அறிவுரைகளையும் வழங்கிய தருணங்கள் அதிகம் உள்ளன. அவற்றில் சிலவற்றை இப்பொழுது கண்டு அனுபவிப்போம்

  • ஒருமுறை, நம்பிள்ளை தன்  ஶிஷ்யர்களோடே திருவெள்ளறையிலிருந்து திருவரங்கத்திற்கு பரிசிலில் திரும்பிக்கொண்டிருக்க , காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பரிசிலோட்டி, யாரேனும் ஒருவர் கீழே குதித்தால் தான் படகு கவிழாது இருக்கும் என்று கூற, உடனே அங்கிருந்த ஒரு அம்மையார் பரிசில் விடுவானைக் கண்டு ‘கண் போன்ற நம்பிள்ளையை பத்திரமாகக் கரை சேர்த்து விடு ” என்று கூறி குதித்தார். இதனைக் கண்ட நம்பிள்ளை “ஒரு ஆத்மா தட்டுப்போயிற்றே” என்று மிகவும் வருந்தினார். கரைசேர்ந்த பின்னர் அந்த அம்மையாரின் குரல் கேட்க, அந்த அம்மையாரும் நம்பிள்ளையிடத்தே தெண்டன் ஸமர்பித்து “ஒரு மேடாய் இருந்து நம்மை ரக்ஷித்ததே” என்று பரவசித்துக் கூற , நம்பிள்ளை தானும் “உமது நம்பிக்கை அதுவாயின் அப்படியும் ஆகலாம் ” என்று ஸாதித்தார், இதிலேருந்து நாம் உணரவேண்டியாது யாதெனில் உயிரை விட நேர்ந்தாலும் ஆசாரியனுக்கு அடிமை செய்தலில் ஈடு பட்டிருக்கை ஆகும். நம்பிள்ளை தாமும் மிக இக்கட்டான நிலைமைகளில் இருந்து ஶிஷ்யர்களை ஆசாரியன் காப்பதை இது மூலமாக வெளிப்படுத்தினார் .
  • நம்பிள்ளையின் திருமாளிகைக்கு அடுத்த அகத்தில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவப் பெண்மணி வசித்து வந்தார். அவ்வம்மையாரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் நீர் உமது இடத்தையும்  நம்பிள்ளையிடம்  ஸமர்ப்பிப்பீரே ஆனால், பெரியதான நம்பிள்ளையின் கோஷ்டி எழுந்தருளுவதற்கு உதவியாக இருக்கும் என்று விண்ணப்பித்தார். அவ்வம்மை முதலில் சற்று தயங்கினாலும், பின்னர் நம்பிள்ளையிடத்தே  சென்று நாம் உமக்கு நம் இடத்தை ஸமர்ப்பிக்கிறோம், தேவரீர் அடியேனுக்கு ஸ்ரீவைகுண்டத்திலே ஓர் இடம் அருள வேண்டும், மேலும் நாம் பெண் பிள்ளை ஆதலால் நமக்கு ஒரு சீட்டு எழுதித்தரவேண்டும் என்று பிரார்த்திக்க, ஆசார்யன் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை மிகவும் உகந்த நம்பிள்ளை, “இவருக்கு இந்த வருஷம் இந்த மாதம் இந்த திதி, திருக்கலிக்கன்றி தாஶனான நாம் பரமபதத்தில் ஓர் இடம் எழுதிக்கொடுத்துள்ளோம், அனைத்து உலகங்களுக்கும் எமக்கும்  ஸ்வாமியான வைகுண்டநாதன், இதை  அருள வேண்டும்” என்று சீட்டு எழுதி கொடுக்க அவ்வம்மையார் அன்றைக்கு மூன்றாம் நாள் திருநாடைந்தார் .
  • நம்பிள்ளைக்கு இரண்டு தேவிகள் எழுந்தருளி இருந்தனர். அவர்களில் பெரிய தேவிகளைப் பார்த்து நம்பிள்ளை அவர் தம்மை எவ்வாறாகக் கொண்டுள்ளார் என்று கேட்க, அதற்குப் பெரிய தேவிகள் , தாம் நம்பிள்ளையை எம்பெருமானின் திருவவதாரமாகவும் தனக்கு ஆசார்யனாகவும் கொண்டுள்ளதாகச் ஸாதித்தார். இதனை கேட்ட நம்பிள்ளை திருவுள்ளம் மகிழ்ந்து பெரிய தேவிகளை ததீயாராதனை கைங்கர்யத்தில் ஈடுபடுமாறு கூறினார்.  பின்னர் நம்பிள்ளை இதே கேள்வியை தனது இளைய தேவிகளைக் கேட்க அவர் தாம் நம்பிள்ளையை தனது கணவராகக் கொள்வதாகக் கூறினார். அதற்கு நம்பிள்ளை அவரை, பெரிய தேவிகளுக்கு உதவியாக இருந்து தினமும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஶேஷத்தை உண்டு வருமாறு பணித்தார். இதனால் சிறிய தேவிகளுக்கு நிஷ்டை பெருகி தனது ஶரீர ஸம்பந்தமான கணவன் மனைவி என்ற எண்ணத்திலிருந்து ஆசார்யன் ஶிஷ்யை என்ற எண்ணம் மேலோங்கும் என்று ஸாதித்தார் .
  • மஹா பாஷ்ய பட்டர் என்பவர் நம்பிள்ளையிடத்தே, சைதன்யம் உணர்ந்த ஸ்ரீ வைஷ்ணவரின் எண்ணம் என்னவாய் இருக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு நம்பிள்ளை, அப்படி பட்ட ஒரு ஸ்ரீவைஷ்ணவர் எம்பெருமானே உபாயம் மற்றும் உபேயம் என்று எண்ணவேண்டும். மேலும் நமக்கு ஸம்ஸாரம் என்னும் நோயை போக்கிக்கொடுத்தாரே என்ற நன்றி உணர்வோடு ஆசார்யனிடத்தில் இருத்தலும், ஸ்ரீ பாஷ்யத்தால் ஸ்தாபிக்கப்பட்டதான எம்பெருமானார் தரிஶனமே உண்மை என்று இருத்தலும், ஸ்ரீமத் ராமாயணத்தைக் கொண்டு பகவத் குணாநுஶந்தானத்திலும், அருளிச்செயல்களில் ஈடுபட்டிருத்தலும் வேண்டும் என்று ஸாதித்தார். இறுதியாக, இவ்வாழ்கையின் முடிவில் பரமபதத்தைக் காண்போம் என்ற உறுதி வேண்டும் என்று ஸாதித்தார்.
  • பாண்டிய நாட்டிலிருந்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்பிள்ளையிடத்தே வந்து தங்களுக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தின் ஸாரத்தைச் சாதிக்க வேண்டும் என்று பிரார்த்திக்க, அதற்கு நம்பிள்ளை, கடற்கரையை நினைத்திருக்கச் சொன்னார். இதனைக் கேட்டுக் குழப்பமடைந்த அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நம்பிள்ளை, ராவணனோடு போரிடுவதற்கு முன் சேதுக்கரையில் ஸ்ரீ ராமன் குடில் அமைத்து தங்கிக்கொண்டிருக்கையில் சுற்றிக் குரங்குகள் பாதுகாத்துக் கொண்டிருந்தனர். ஆனால் களைப்பால் குரங்குகள் உறங்க, சக்கரவர்த்தித் திருமகனார் தான் சென்று பாதுகாப்பிற்கு எழுந்தருளினார். இதனால் நாம் உறங்கும் வேளையிலும் காக்கும் எம்பெருமான் நம்மை உறங்காத வேளைகளிலும் காத்துக் கொண்டிருக்கிறான் என்ற உறுதியோடு, நாம் நம்மை காத்து கொள்ளுதலைத் (அதாவது ஸ்வ ரக்ஷணே ஸ்வ அந்வயம்) தவிர்த்தல்  வேண்டும் என்று ஸாதித்தார்.
  • இதர தேவதைகளைப் பூசிப்பது பற்றி நம்பிள்ளை ஸாதித்த மிக உன்னதமான விளக்கத்தை இப்போது காண்போம். ஒருவர் நம்பிள்ளையினிடத்தே வந்து, நித்ய கர்மாக்களில் இந்திரன் வருணன் அக்னி போல்வார்களைத் தொழும் நீங்கள் ஏன் அவர்கள் கோவில்களுக்குச் செல்வதில்லை என்று கேட்டார். அதற்கு நம்பிள்ளை மிகவும் அழகாக “நீர் அக்னியை யாகத்தில் வணங்குகிறீர் பிறகு ஏன் சுடுகாட்டில் எரியும் தீயிலிருந்து விலகுகிறீர்? ” என்று கேட்டு, பின்னர் இந்த நித்ய கர்மாக்களை பகவத் கைங்கர்யமாக, இந்த தேவைதைகளுக்கு அந்தர்யாமியாக பகவான் இருப்பதை உணர்ந்து செய்ய வேண்டும் என்று ஶாஸ்த்ரம் அறிவுறுத்துகிறது, அதனால் தான் இவைகளைச் செய்கிறோம். மேலும் அதே ஶாஸ்திரம் ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம், அவரைத் தவிர்த்து வேறொருவருக்குப் பூசனைகள் தகாது என்று கூறுகிறது. அதனால் தான் நாங்கள் இதர தெய்வங்களின் கோவில்களுக்குச் செல்வதில்லை. மேலும் இந்த தெய்வங்களுக்குத் தனி ஸந்நிதி அமையும் போது  தாங்களே மேலானவர்கள் என்ற ரஜோ குணம்  பெருகப் பெற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீ வைஷ்ணவர்களோ ஸாத்வீக குணம் மேலோங்கப் பெற்றவர்கள். அதனால் எங்கள் பூசனைக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள் என்று ஸாதித்தார் .
  • ஒரு ஸ்ரீவைஷ்ணவர் நம்பிள்ளையிடம்  சென்று அவர் முன்பிருந்ததை விட மெலிந்திருப்பதாகக் கூற அதற்கு நம்பிள்ளை ஆத்மவாகப்பட்டது வளரும் போது  ஶரீரம் மெலியும் என்று ஸாதித்தார்
  • மற்றொரு ஸ்ரீவைஷ்ணவர் நம்பிள்ளையை நோக்கி தேவரீர் ஏன்  திருமேனியில் தெம்பின்றி எழுந்தருளி இருக்கிறீர் என்று கேட்க அதற்கு நம்பிள்ளை, எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்ய அடியேனின் உடலில் தெம்பு உள்ளது. அதற்கு மேல் சக்தி இருந்து அடியேன் ஒன்றும் போர் தொடுக்கப் போவதில்லை என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தேக ஶக்தியில் ஈடுபாடிருத்தல் கூடாது.
  • ஒருமுறை நம்பிள்ளை திருமேனியில் நோவு சாற்றிக்கொண்டிருக்க, இதைக் கண்ட ஒரு ஸ்ரீவைஷ்ணவர் திருவுள்ளம் நொந்தார். அதற்கு நம்பிள்ளை, ஒருவருக்கு இன்னல்கள் நேர்வதும் நன்மையே ஏனென்றால் ஶாஸ்திரம் “எவன் ஒருவன் எம்பெருமானை சரணாகக் கொண்டுள்ளானோ அவன் ம்ருத்யு தேவதைக்காகக் காத்திருக்கிறான்” என்று கூறிகிறது, என்று ஸாதித்தார்.
  • நம்பிள்ளை மீது கொண்டுள்ள அன்பினால், சில ஸ்ரீவைஷ்ணவர்கள், எங்களாழ்வான் கூறியதன் பெயரில், நம்பிள்ளை நோயிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக அவருக்கு ரக்ஷை கட்ட முயல்கின்றனர். இதனை நம்பிள்ளை ஏற்க மறுத்துவிடுகிறார். நம்பிள்ளையின் இந்த செயலுக்குக் காரணம் கேட்ட அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் “ஒருவர் தனது நலனில் ஈடு படுவது தவறு ஆனால் பிறர் நலத்திற்காக முயற்சி எடுப்பது  எவ்விதத்தில் தவறாகும்” என்றும் கேட்டனர். அதற்கு நம்பிள்ளை நாம் பட்ட நோவை நாமே சரி படுத்த முயல்கையில் நாம் எம்பெருமானையே அண்டி உள்ளவர்கள் என்ற ஸ்வரூபத்தை உணராதவர்கள் ஆகிறோம். அதே போன்று வேறொருவர் நோவிற்கு நிவாரணத்தை நாம் செய்கையில், எம்பெருமானின் ஞானம் மற்றும் ஶக்திகளை உணராமலும், மற்ற பக்தர்களின் நலனுக்கும் நாம் அவனையே  நாட வேண்டும் என்ற உண்மையை மறந்தவர்கள் ஆகிறோம் என்று விளக்கம் ஸாதித்தார். நம்பிள்ளையின் நிஷ்டையாகப்பட்டது இவ்வண்ணம் மிக உயர்ந்ததாக இருந்தது. நாம் ஒன்றை நினைவில் கொள்ளுதல் சாலச் சிறந்தது. அது யாதெனில் மாறனேரி நம்பியைப் போல, மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஏதேனும் துன்பங்கள் நேர்கையில் அவர்களுக்கு உதவியாய் இருத்தலும் நம் கடமையே .
  • பல ஆசார்ய திருவம்ஶங்களில் வந்து தோன்றியவர்கள் நம்பிள்ளையினிடத்தே ஶிஷ்யர்களாக எழுந்தருளியிருந்தனர். இவரது ஶிஷ்யர்களான நடுவில் திருவீதிப் பிள்ளை (125000 படி) மற்றும் வடக்குத் திருவீதிப் பிள்ளை (ஈடு 36000 படி) இருவருமே திருவாய்மொழிக்கு வியாக்யானம் செய்தருளினார். அதில் நடுவில் திருவீதிப் பிள்ளையின் வியாக்யானத்தை நம்பிள்ளை, மிக பெரியதாக இருந்ததால், கரையானுக்கு இரையாக்கி விட்டார். வடக்குத் திருவீதிப் பிள்ளை செய்தருளிய வியாக்யானத்தை, வரும் காலங்களில் கோயில் நாயனாரான அழகிய மணவாளமாமுனிகள் தானே வெளிப்படுத்தட்டும் என்று திருவுள்ளம் கொண்டு, ஈயுண்ணி மாதவர் என்பவரிடம் கொடுத்துவிட்டார். மேலும், நம்பிள்ளை  பெரியவாச்சான் பிள்ளையை திருவாய்மொழிக்கு வியாக்யானம் எழுதப் பணிக்க அவரும் ஆசார்யன் திருவுள்ளப்படி 24000 படி வியாக்யானத்தைச் ஸாதித்தார். நம்பிள்ளை திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்த காலத்தை நல்லடிக்காலம் என்றே கொண்டாடுவர் அடியார்கள்.
  • நம்பிள்ளை கோயில் வள்ளலார் என்பவரிடம் “குலம் தரும் “ என்று தொடங்கும் பாசுரத்திற்கு விளக்கமருளும்படி கேட்க, அதற்கு அவர், “குலம்  தரும் என்பது அடியேன் பிறந்த குலத்திலிருந்து தேவரீரின் குலமான  நம்பூர் குலத்தை  நமக்கு அருளியதே, அதே ஆகும்” என்று ஸாதித்தார். இது பண்டைக்குலத்தைத் தவிர்ந்து தொண்டக்குலத்தில் இருப்பதான பெரியாழ்வார் ஸ்ரீ    ஸூக்திகளுக்கு நிகராக உள்ளது. நம்பிள்ளையின் பெருமைகள் இவ்வாறு சிறந்து விளங்கின.

பெரியவாச்சான் பிள்ளை நம்பிள்ளை விஷயமாகக் கூறுவதை இப்பொழுது காண்போம். ஏழை எதலன் பதிகத்தில், “ஓது வாய்மையும்” பாசுரத்தில் (பெரிய திருமொழி 5.8.7) , ‘அந்தணன் ஒருவன் ‘ என்ற இடத்திற்கு விளக்கமருளுகையில், பெரியவாச்சான் பிள்ளை தனது ஆசார்யனையே சிறந்த அந்தணன் (தனித்துவம் பெற்ற பண்டிதர்) என்று கொண்டாடுகிறார். பெரியவாச்சான் பிள்ளையின் அற்புத விளக்கம் “முற்பட த்வயத்தைக் கேட்டு, இதிஹாஸ புராணங்களையும் அதிகரித்து, பரபக்ஷ ப்ரத்க்ஷேபத்துக்குடலாக ந்யாயமீமாம்ஸைகளும் அதிகரித்து, போதுபோக்கும் அருளிச் செயலிலேயாம்படி பிள்ளையைப்போலே அதிகரிப்பிக்க வல்லவனையிரே ஒருவன் என்பது”. இவ்விடத்திலே ஸாந்தீபனி முனி சற்றே நம்பிள்ளயைப் போலே என்று ஸாதிக்கிறார். எனினும் நம்பிள்ளை ஸாந்திபனியைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்தவர் – காரணம், நம்பிள்ளை எப்பொழுதும் பகவத் விஷயத்திலேயே ஈடுபட்டிருந்தவர். ஸாந்திபனியோ முகுந்தனான எம்பெருமான் கண்ணனிடம் இறந்த தனது மகனை திரும்பவும் கொண்டுவருமாறு கேட்டார்.

தமிழ் மற்றும் ஸமஸ்க்ருதத்தில் இருந்த ஆழ்ந்த ஞானத்தால், நம்பிள்ளை தன்னிடம் காலக்ஷேபம் கேட்க வருபவர்களை இன்பக் கடலில் ஆழ்த்தி விடுவார் . மேலும் நம்பிள்ளையினால் தான் திருவாய்மொழியும் மற்ற அருளிசெயல்களும் நன்கு பரவுவதில் புதிய உயரத்தை கண்டன. 6000 படி தவிர்த்த திருவாய்மொழிக்கான மற்ற நான்கு வ்யாக்யானங்கள் நம்பிள்ளையோடே தொடர்புடையவை ஆகும்

  • நஞ்சீயரால் ஸாதிக்க பட்டிருந்தாலும் 9000 படி வியாக்யானம் நம்பிள்ளையால் இன்னொரு முறை இன்னும் ஆழமான அர்த்தங்களோடு திரும்ப எழுதப்பட்டது.
  • நம்பிள்ளையிடம் கேட்டவைகளைக்கொண்டும் நம்பிள்ளையின் உத்தரவின் பெயரிலும் பெரியவாச்சான் பிள்ளை ஸாதித்ததே 24000 படி ஆகும் .
  • நம்பிள்ளையிடம் கேட்டதைக்கொண்டு வடக்கு திருவீதிப்பிள்ளை ஏடு படுத்தியதே 36000 படி வியாக்யானம் ஆகும்.
  • பெரியவாச்சான்பிள்ளையின் ஶிஷ்யரான வாதிகேஶரி அழகியமணவாள ஜீயர் ஸாதித்ததே 12000 படி வ்யாக்யானமாகும் . இதில் காணும் அர்த்தங்களைக்கொண்டு இது 36000 படியை மிகவும் நெருக்கமாக பின்பற்றுகிறது என்று நாம் உணரலாம். 

இவைகளோடன்றி தனது பெருத்த கருணையினால், நம் ஸம்பிரதாயத்தின் இரு தூண்களான, பூருவர்களிடமிருந்து கேட்டவைகளைக்கொண்டு சீர் வசனபூடனம் மற்றும் ஆசார்ய ஹ்ருதயங்களை ஸாதித்தவர்களான  பிள்ளை உலகாரியன் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்கு நம்பிள்ளையின் அருளே காரணமாக அமைந்தது. நமது அடுத்த பதிவில் வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவத்தைக் காண்போம். 

nampillai-pinbhazakiya-perumal-jeer-srirangam
(பின்பழகராம் பெருமாள் சீயரோடு நம்பிள்ளை, திருவரங்கம் )

திருவரங்கத்தில் தனது சரம திருமேனியை விடுத்து மேலான திருநாட்டுக்கு நம்பிள்ளை எழுந்தருளினார். இதனைக் கண்ட நடுவில் திருவீதிப் பிள்ளை  பட்டர் தானும் சவரம் செய்துக்கொண்டு விடுகிறார் . (ஶிஷ்யர்களும் மகன்களும் ஆசார்யானோ தந்தையோ பரமபதிக்கையில் சவரம் செய்துகொள்வர்). கூர குலத்தில்  பிறந்தும் இவ்வாறு செய்ததை பட்டரின் திருத்தமையனார் நம்பெருமாளிடம் கூற, நம்பெருமாள் பட்டருக்கு அருளப்பாடிட்டு அனுப்பினார். இவ்வாறு செய்தருளியது ஏன் என்று கேட்ட நம்பெருமாளிடம், தமது குடும்பத்தை காட்டிலும் நம்பிள்ளையோடு  தாம் கொண்டுள்ள ஸம்பந்தத்தைப் பெரிதும் உகப்பதாக பட்டர் ஸாதித்தார். இதனைக்கேட்ட நம்பெருமாள் திருவுள்ளம் உகந்தார். 

நம் ஆசார்யனிடத்திலும் எம்பெருமானிடத்திலும் இவ்வாறான பற்று நமக்கும் ஏற்பட , நாம் அனைவரும் நம்பிள்ளையின் திருவடிகளைப் பிரார்த்திப்போம் . 

நம்பிள்ளையின் தனியன்:

வேதாந்த வேத்ய அம்ருத வாரிராஸேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம்

நம்பிள்ளையின் வாழி திருநாமம்:

தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே

காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே
கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே
போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே
பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே
மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே
மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே
நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே

நமது அடுத்த பதிவில் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் வைபவத்தை அனுபவிப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்
அடியேன் ராமானுஜ தாசன் – எச்சூர் ஸ்ரீநிவாசன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2012/09/16/nampillai/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

6 thoughts on “நம்பிள்ளை

  1. பிங்குபாக்: kalivairi dhAsar (nampiLLai) | guruparamparai – AzhwArs/AchAryas Portal

  2. பிங்குபாக்: வடக்குத் திருவீதிப் பிள்ளை | guruparamparai thamizh

  3. பிங்குபாக்: பிள்ளை லோகாசார்யர் | guruparamparai thamizh

  4. பிங்குபாக்: திருக்கோஷ்டியூர் நம்பி | guruparamparai thamizh

  5. பிங்குபாக்: திருவரங்கப் பெருமாள் அரையர் | guruparamparai thamizh

  6. பிங்குபாக்: பிள்ளை உறங்கா வில்லி தாஸர் | guruparamparai thamizh

பின்னூட்டமொன்றை இடுக